இந்திய வரலாற்று காங்கிரஸ், இந்திய வரலாற்று காங்கிரசு ஆகி, “திராவிட சரித்திர காங்கிரஸ்” மாநாடாக மாறியது – 27-12-2022 அன்று மோடி, பினராயி விஜயன் மற்றும் ஸ்டாலின் சரித்திரம் பற்றி பேசியது (4)
மதசார்பின்மை கதையும், வரலாறும்: வானதி சீனிவாசன் தனது அறிக்கையில் குறிப்பிட்டது, “இந்த உண்மையான வரலாற்றை மறைத்து, தமிழர்களை ஏமாற்றும் தந்திரத்தைதான், முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் விமர்சித்திருப்பார் என நம்புகிறேன். என்னதான் தி.மு.க.வினர் மறைத்தாலும், உண்மை தான் இறுதியில் வெல்லும். அதுவும் இது, தகவல் தொழில்நுட்ப யுகம். இப்போது எதையும் மறைக்க முடியாது. இனம், மொழி வெறியைத் தூண்டி, குடும்ப அரசியலை நீண்ட காலத்திற்கு நடத்த முடியாது என்பதை தி.மு.க.வினர் உணர வேண்டும். காலம் அதனை நிச்சயம் உணர்த்தும். இதே மாநாட்டில் பேசும்போது, “மதச்சார்பின்மை என்பது நமது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை” என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் பேசியுள்ளார். அவருக்கு ஓர் உண்மை வரலாற்றை நினைவுப்படுத்த விரும்புகிறேன். 1950-ல் டாக்டர் அம்பேத்கர் தலைமையில், இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது, அரசியலமைப்பின் முகப்புரையில் ‘மதச்சார்பின்மை’ என்ற வார்த்தை சேர்க்கப்படவில்லை. 1975-ல் நாட்டில் நெருக்கடியை நிலையை அறிவித்த அன்றைய பிரதமர் இந்திரா காந்தி, மிசா சட்டத்தின்கீழ், எதிர்க்கட்சித் தலைவர்களை எல்லாம் சிறையில் அடைத்து விட்டு, கொடுங்கோல் ஆட்சி நடத்தினார். எதிர்க்கட்சி எம்.பி.க்களை சிறையில் அடைத்துவிட்டு, அரசியலமைப்பு சட்டம் வழங்கிய அடிப்படை உரிமைகளான பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமையை எல்லாம் முடக்கிவிட்டுதான், இந்திய அரசியலமைப்பின் முகப்புரையில், மதச்சார்பின்மை என்ற வார்த்தையை, இந்திரா காந்தி சேர்த்தார்.”
தமிழகத்தின் உண்மையான வரலாறு எழுதப்பட வேண்டும்; வானதி சீனிவாசன் தனது அறிக்கையில் குறிப்பிட்டது, “இந்த வரலாற்றையும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், வரலாற்று காங்கிரஸ் மாநாட்டில் பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். மதச்சார்பின்மை‘ என்பது மதங்களை ‘மறுப்பது‘ அல்ல. அனைத்து மதங்களையும் ‘சமமாக‘ பேணுவதே. ஆனால், தி.மு.க.வின் மதச்சார்பின்மை என்பது, இந்து மதத்தற்கு மட்டும் எதிராக செயல்படுவது. அதனால்தான், மற்ற மதங்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், இந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து கூறுவதில்லை. இந்த மாநாட்டில், “பொய் வரலாறுகளை புறந்தள்ளி, மக்களை மையப்படுத்திய உண்மை வரலாறு எழுதப்பட வேண்டும்” என்று முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் பேசியதையே நானும் வலியுறுத்துகிறேன். தமிழகத்தின் உண்மையான வரலாறு எழுதப்பட வேண்டும். ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் உள்ளிட்ட சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் கட்டிய இந்து கோவில்கள் பற்றியும், அவர்கள் பின்பற்றிய இந்து தர்மம், கலாசாரம் பண்பாடு பற்றியும், ஆங்கிலேயர்களின் சூழ்ச்சிகள், மொகலாய மன்னர்கள், சுல்தான்கள் ஆட்சியில் இடிக்கப்பட்ட கோவில்கள் பற்றிய வரலாறும் எழுதப்பட வேண்டும். இந்த உண்மைகளை எல்லாம் குறிப்பிட வாய்ப்பளிக்கும் வகையில், இந்திய வரலாற்று காங்கிரஸ் மாநாட்டில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி,” என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
27-12-2022 அன்று மோடி, பினாராயி விஜயன் மற்றும் ஸ்டாலின் சரித்திரம் பற்றி பேசியது[1]: கடந்த நவம்பர் மாதம், 17-ம் நூற்றாண்டில் முகலாய மன்னர் ஔரங்கசீப்பின் படைகளை வென்ற லச்சித் பர்புகானின் 400-ம் ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. அதில் பேசிய பிரதமர் மோடி[2], “நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இந்திய வரலாறு இந்தியப் பார்வையில் எழுதப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அந்நியர்கள் ஆட்சிக்காலத்து சதியின் ஒரு பகுதியாக எழுதப்பட்ட வரலாறுதான் தொடர்ந்து கற்பிக்கப்படுகிறது. அந்நியர்களுக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுத்து, தியாகம் புரிந்தவர்களின் வரலாறு கற்பிக்கப்பட வேண்டும். அதற்கு ஏற்ப நாட்டின் வரலாறு மாற்றி எழுதப்பட வேண்டும்” என்றார். அதைத் தொடர்ந்து, டிசம்பர் 27-ம் தேதி நடைபெற்ற வீர பாலகர் தின நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “இந்தியாவின் வீர வரலாறு தன்னம்பிக்கையை வளர்க்கும். ஆனால், இந்திய வரலாறு என்ற பெயரில் பொய் கதைகள் கற்பிக்கப்படுகின்றன” என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். மேலும், “வீர பாலகர் தினம் என்பது இந்தியாவின் வீரம், தியாகம், சீக்கிய பாரம்பர்யத்தின் அடையாளம். மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு சம்கவுர், சிர்ஹிந்த் போர்கள் நடைபெற்றன. மதஅடிப்படைவாதத்தைப் பின்பற்றிய முகலாயப் படைகளுக்கு எதிராக நமது குருக்கள் துணிச்சலாகப் போராடினர். சீக்கிய குரு கோவிந்த் சிங்கும், அவரின் மகன்களும் எந்த அச்சுறுத்தலுக்கும் அஞ்சவில்லை. யார் முன்பும் தலைவணங்கவில்லை. கோவிந்த் சிங்கின் சிறுவயது மகன்கள் உயிருடன் சமாதி கட்டப்பட்டனர். ஒருபுறம் மிருகத்தனம், மறுபுறம் பொறுமை, வீரம் வெளிப்பட்டது,” என்றார்.
27-12-2022 அன்று கேரளாவின் முதல்வர் பினராயி விஜயனும் இந்திய வரலாறு குறித்து சமீபத்தில் பேசியது: இவ்வாறு இந்திய வரலாறு குறித்து பிரதமர் மோடி பேசிவரும் நிலையில், கேரளாவின் முதல்வர் பினராயி விஜயனும் இந்திய வரலாறு குறித்து சமீபத்தில் பேசியிருக்கிறார். கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு பாறப்புறத்தில் டிசம்பர் 27-ம் தேதி நடைபெற்றது. அதில் பேசிய கேரளா முதல்வர், “சுதந்திரப் போராட்டத்துக்கு துரோகம் செய்தவர்களைத் துணிச்சலான தேசபக்தர்கள் என்றும், விடுதலைப் போராட்ட வீரர்கள் என்றும் இன்றைய ஆட்சியாளர்கள் சித்திரித்துவருகின்றனர்” என்று ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க-வை விமர்சித்தார். “ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பரிவாரங்களால் துணிச்சலான தேசபக்தர் என்று போற்றப்பட்ட சாவர்க்கர், ஆங்கிலேயர்களுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிவிட்டு அந்தமான் சிறையிலிருந்து விடுதலை பெற்றார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் எந்தப் பங்கையும் வகிக்கவில்லை. சுதந்திரப் போராட்டத்தை எந்தெந்த வழிகளில் சிதைக்கலாம் என்று சிந்தித்தார்கள். தேசிய இயக்கத்தில் கம்யூனிஸ்ட்டுகள் முக்கியப் பங்கு வகித்தனர்” என்று பினராயி விஜயன் குறிப்பிட்டார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் பா.ஜ.க-வின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துக்கு எந்தப் பங்கும் இல்லை என்று இடதுசாரிகளும், காங்கிரஸ் கட்சியினரும் தொடர்ந்து கூறிவருகிறார்கள். சமீபத்தில், காங்கிரஸ் தலைவர் கார்கேகூட இந்தக் கருத்தைக் குறிப்பிட்டார்.
27-12-2022 அன்று ஸ்டாலின் பேசியது: இந்தப் பின்னணியில்தான், இந்திய வரலாறு மாற்றி எழுதப்பட வேண்டும் என்று பா.ஜ.க-வினர் கூறிவருகிறார்கள். மேலும், “கற்பனைக் கதைகளை சிலர் வரலாறாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதை நம்பி ஏமாந்துவிடக் கூடாது. அதை ஏற்கக் கூடாது. அறிவுமிக்க சமுதாயம் அதை ஏற்றுக்கொள்ளாது. இன்று நாட்டைச் சூழ்ந்திருக்கும் ஆபத்து என்பது இந்த வரலாற்றுத் திரிபுதான்” என்று பா.ஜ.க-வை மறைமுகமாகச் சாடினார் ஸ்டாலின். ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்ட வரலாற்று அறிஞர்களின் ஆய்வு நூல்களை பா.ஜ.க ஏற்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், இவர்களின் நூல்களையெல்லாம் மனதில் வைத்துத்தான், இந்திய வரலாறு மாற்றி எழுதப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் பேசுகிறார்கள் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். 1990களில் சரித்திராசிரியர்கள் வேறுபட்டு சண்டை போட்டுக் கொண்டனர். இப்பொழுது அவர்களில் பாதி பேர் காலமாகி விட்டனர், சிலருக்கு 70-80-90 என்று வயாதாகி விட்டது. மற்றவர்களோ உண்மையினை மறைத்து பேசி வருகின்றனர்.
© வேதபிரகாஷ்
30-12-2022
[1] விகடன், இந்திய வரலாற்றைக் குறை கூறிவரும் பிரதமர் மோடி – பாஜக மாற்றி எழுத விரும்புவது எதை?!, ஆ.பழனியப்பன், Published:Today at 7 AM; Updated: 7.30 PM.
[2] https://www.vikatan.com/government-and-politics/politics/the-prime-minister-modi-reiterates-to-rewrite-indian-history